"படியேறும் பெருமாள்" எனும் இலக்கியவாதி... பக்...பக்.. பதற்றத்தில் ப.சிதம்பரம் அண்ட் கோ
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீண்டகால உதவியாளரான கே.வி.கே. பெருமாள் தரும் ஒப்புதல் வாக்குமூலம்தான் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும் என நம்புகிறது சிபிஐ வட்டாரங்கள்.
ப.சிதம்பரம் மீதான வழக்குகளில் கண்ணாமூச்சி ஆட்டத்தை அத்தனை தரப்பும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. ப.சிதம்பரத்தின் வீட்டு சுவர் ஏறி குதித்து கைது செய்தது சிபிஐ.
இப்போது தாமே சரணடைகிறேன் என சிதம்பரமே மனு கொடுத்தும் அவரை கைது செய்யாமல் இருக்கிறது அமலாக்கத்துறை. ஒருபக்கம் வயதானவர் என்பதால் ஜாமீன் கேட்டு வாதம்.. இன்னொரு பக்கம் விசாரணைக் காவலுக்கு போகிறேன் என ஒரு மனுவுடன் மற்றொரு நீதிமன்றத்தில் வாதம்..
1980களில் இருந்து...
இந்த சடுகுடு ஆட்டங்களின் மையப்புள்ளியாக இருப்பவர்தான் கே.வி.கே. பெருமாள். மத்திய நிதி அமைச்சகத்தில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த காலத்தில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஆம் ராஜீவ் காந்தி காலத்தில் தொடங்கியது இருவருக்குமான உறவு.
டெல்லி தமிழ்ச் சங்கம்
கே.வி.கே. பெருமாள் தமிழர் என்பதுடன் இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றியவர். ப.சிதம்பரத்தின் நிழலாகத்தான் பெருமாள் வலம் வந்தார். அதனால்தான் ப.சிதம்பரத்தின் ஆதி அந்தங்கள் அத்தனையையும் முற்று முழுதாக அறிந்த மனிதர். இவரின்றி ப.சிதம்பரத்திடம் அணுகூட அசையாது என்கிற சகாப்தம் சிலபல கசப்புகளால் 2010-ல் ஆட்டம் காண தொடங்கியது.
பெருமாளின் கனத்த மவுனம்
ப.சிதம்பரம் குறித்து கனத்த மவுனத்துடன்தான் இலக்கியம், ஆன்மீக சொற்பொழிவாளராக மட்டும் இயங்கினார். ஒருகட்டத்தில் மீண்டும் சிதம்பரம் குடும்பத்துடன் நட்பு புதுப்பிக்கப்பட்டது.
டெல்லியில் ஜல்லிக்கட்டு போராட்டம்
சமூக வலைதளங்களில் இப்போதும் தீவிரமாக இயங்குகிறார். அரசியல் ஆளுமைகள் தொடர்பாக தமது நினைவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார். 2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது டெல்லியில் 300 இளைஞர்களுடன் நடத்தப்பட்ட பிரமாண்ட போராட்டத்துக்கு தலைமை ஏற்றவர்களில் பெருமாளும் ஒருவர். இப்போது சிபிஐ, அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார் கே.வி.கே. பெருமாள்.
ஒரே ஒரு முறை விசாரணை
இவர் தரப்போகும் தகவல்கள்தான் ப.சிதம்பரம் மீதான பல வழக்குகளுக்கு பெரும் ஆதாரம் என நம்புகிறது டெல்லி. கே.வி.கே. பெருமாளிடம் தற்போதைய நிலையில் ஒரே ஒரு முறை விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
ப,சிதம்பரத்தை சிக்க வைப்பாரா?
ஆனால் அந்த விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த தகவலையும் பெருமாள் கூறவில்லையாம். இதேபோக்கை அடுத்தடுத்த விசாரணையில் கடைபிடித்தால் பெருமாள் மீதான பழைய புகார்களை தூசிதட்டி தமது இன்னொரு முகத்தை காட்டும் முடிவில் இருக்ககிறதாம் டெல்லி அதிகார மையங்கள்.