60 நிலம்.. யார் அவர்கள்? 2வது நாளாக செந்தில் பாலாஜியை திணறடித்த அமலாக்கத்துறை.. தினமும் 9 மணி நேரம்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. பினாமிகள் பெயரில் நிலம் வாங்கப்பட்டது குறித்து இன்று விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 9 மணி நேரம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனராம்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14ஆம் தேதி சோதனை நடத்தி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. இதை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் விசாரணை நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜியிடம் நேற்று இரவே உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. நேற்று இரவு 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று இரவு விசாரணை முடிந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே செந்தில் பாலாஜி விசாரணைக்கு தயாரவதற்காக எழுப்பி விட்டுள்ளனர். பின்னர், அவருக்கு காலை உணவு அளிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த ரிப்போர்ட் வருவதற்குள், அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை விசாரணை செய்யும் அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த 3ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் 60 நிலங்கள் தொடர்பான ஆவணங்களும், ரூ.22 லட்சம் கணக்கில் காட்டப்படாத பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தது.
அந்த 60 நிலங்களும் பினாமி பெயர்களில் இருந்ததைக் கண்டறிந்த அமலாக்கத்துறை, அந்த பினாமிகள் யார்? நிலங்களை வாங்க எப்படி அவர்களுக்கு பணம் கிடைத்தது? என்பது உள்ளிட்ட கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 7 மணிக்குப் பிறகு மீண்டும் விசாரணையை தொடங்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு இடையிடையே சிறிது ஓய்வு கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு செந்தில் பாலாஜியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications