நான் ஸ்டாப் 6 மணி நேரம்.. பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு
சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி ஆகியோரிடம் இன்று 2 வது நாளாக நடைபெற்ற விசாரணை 6 மணி நேரம் கழித்து நிறைவடைந்து இருக்கிறது. விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து இருவரும் காரில் ஏறி வீட்டுக்கு சென்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை தொடங்கினர்.

சென்னை சைதாபேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகள், கௌதம சிகாமணியின் அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, பொன்முடியின் இளைய மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்
சென்னை வீட்டிலேயே அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். வங்கி அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த தீவிர சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பணம், வெளிநாட்டு கரன்சி போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் அசோக் சிகாமணியின் 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 13 மணி நேர தீவிர சோதனைக்கு பின் நேற்று இரவு 8 மணிக்கு அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காரில் அழைத்து சென்றனர்.
மறுபக்கம் விழுப்புரம் மற்றும் சென்னையில் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு சுரங்க நிறுவனத்துக்கு ரூ.100 கோடி பணம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பல மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பொன்முடியிடம் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நிறைவு செய்தனர். அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2 வது நாளாக தனது மகன் கௌதம சிகாமணியுடன் விசாரணைக்கு ஆஜரானார்.
பொன்முடியை ஒரு தளத்திலும், கௌதம சிகாமணியை வேறு தளத்திலும் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 6 மணி நேர இடைவிடாத விசாரணையை தொடர்ந்து இரவு 10 மணியளவில் விசாரணை முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இருவரும் தங்கள் காரில் வீட்டுக்கு சென்றனர்.












Click it and Unblock the Notifications