துஷார் மேத்தா வாதம் ஓவர்.. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு விசாரணை ஜூலை 14க்கு ஒத்திவைப்பு!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பாக அமலாக்கத்துறை தரப்பில் இன்று வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வாங்கிய பணத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப்பிரிவினர், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர்.

செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை கூறியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகளும் எந்தெந்த கருத்துக்களில் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பும், அமலாக்கத் துறை தரப்பும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா? அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷா பானு கையாளவில்லை எனவும், இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி கையாண்டுள்ளதால் இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என கூற முடியாது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன்வைக்க கூடாது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார். இது குறித்த வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து, இறுதி முடிவெடுக்க வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன், செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்றதா? என்பது குறித்து நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை எடுத்து வைத்தார். அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா வாதம் இன்று நிறைவடைந்தது.
இதையடுத்து, பதில் வாதத்துக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications