கைதான செந்தில் பாலாஜி.. தலைமை செயலகத்தை விட்டு கிளம்பிய ED! 13 மணி நேர ரெய்டில் சிக்கிய 3 மர்ம பைகள்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை மேற்கொண்டு வந்த அதிகாரிகள் அங்கிருந்து 3 பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்கள்.
நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் காலை சோதனையை தொடங்கிய அமலாக்கத்துறை, மதியம் 1.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் சோதனையிட சென்றனர். முதலில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் 2 இந்தியன் வங்கி அதிகாரிகள் சோதனையிட சென்றனர்.

செந்தில் பாலாஜியின் அறைக்கு உள்ளே அவரது 2 உதவியாளர்களும், துறை சார்ந்த அலுவலர்களும் இருந்தனர். இவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேறினர். வங்கி அதிகாரிகள் உட்பட 3 பேர் மட்டும் தொடர்ந்து சோதனையிட்டனர்
சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜி அறைக்கு அருகில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் அறையும் உள்ளது. சோதனை நடைபெறும் பகுதிக்கு தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் தலைமை செயலகத்தை சுற்றி காவல்துறை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அருகில் உள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்திற்கு மட்டும் துறை சார்ந்த அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டார்களாம்.
செந்தில் பாலாஜி அறையில் இருந்த 3 கணினிகளை அமலாக்கத்துறை சோதித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9 மணியளவில் சோதனையில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கான உணவு பொருட்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் அருந்துவதற்காக பால் பாக்கெட், தேநீர் போன்றவையும் கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து கிரீன்வே சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்ற அதிகாரி ஒருவர் கையில் சம்மன் கடிதத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவரது வீட்டில் நடைபெற்ற 17 மணி நேர சோதனை முடித்துக்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து காரில் ஏற்றிச்சென்றனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றார்கள். அவரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எவ வேலு, சேகர் பாபு, ரகுபதி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தனர்.
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும் நிறைவடைந்தது. 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையை முடித்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் 3 பைகள் நிறைய ஆவணங்களையும் எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications