டாஸ்மாக்கில் ED.. பயத்தில் ஸ்டாலின்! அதிமுக ’மாஜிகள்’ மீது ரெய்டுக்கு என்ன காரணம்? எடப்பாடி அட்டாக்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி ஆகியோரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் திரு. ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மது கடைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை நேற்று முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
திட்டமிட்டு திமுக மீது பழிவாங்கும் நோக்கத்தில் அரசியல் உள்நோக்கோடு சோதனை நடத்தப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆரணி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி ஆகியோரின் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் நீதிபதி, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1.4 கோடி சொத்து சேர்த்ததாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருவது ஸ்டாலினுக்கு பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் வீட்டில் காவல்துறையை ஏவி இருக்கிறார் என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் திரு. ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார். டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து
திரு. ஸ்டாலின் , மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள்
அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம். சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications