முந்திக் கொண்டு வந்த ஓபிஎஸ்.. அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி.. கட்சி கொடிகளை தனித்தனியாக ஏற்றினர்
அஇஅதிமுகவின் பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா இன்று நடக்கிறது
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது... இதையடுத்து, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ்ஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தாலும், 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது.. இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்..
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் கோலாகலம் பூண்டுள்ளது.. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு இன்று காலை வருகை தந்தார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இனிப்புகள்
கட்சி அலுவலகம் அவருக்கு, ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.. பிறகு எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. பிறகு அதிமுக கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

ஜெ.ஜெ.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து பிரிவு அணியினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.. அதேபோல, பெருமிதம் பொங்கும் இந்த விழாவை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை, வார்டு, வட்ட மாவட்ட அளவிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

ஸ்வீட்கள்
அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆரின் தி.நகர் நினைவு இல்லத்தில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்கு சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளையும் அளித்தார்.. இதற்காக தொண்டர்களுக்கும் பிரத்யேகமாக அறிக்கை விடுத்து அழைப்பும் முன்னதாகவே விடுத்திருந்தார் ஓபிஎஸ். பின்னர் சட்டசபை நிகழ்வில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

ஷார்ப் 2 மணி
சசிகலாவை பொறுத்தவரை, சென்னை ராமாவரத்தில் அதிமுக பொன்விழாவை கொண்டாட உள்ளதாக தெரிகிறது. ராமாவரத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அதிமுக பொன்விழாவில் சசிகலா பங்கேற்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்களுக்கு அவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். கட்சியின் பேச்சாளர்கள், மூத்த முன்னோடிகள், கலைக் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரை கவுரவித்து, நலத்திட்ட உதவிகளையும் சசிகலா வழங்க உள்ளதாக தெரிகிறது. அதிமுக பொன்விழாவை இப்படி தனித்தனியாக 3 தலைவர்கள் கொண்டாடும் சூழலில், எடப்பாடி, சசிகலாவை முந்திக்கொண்டு வந்து, முதல்மரியாதையை செலுத்தினார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications