தர்மத்திற்கு கிடைத்த வெற்றி.. இனியும் இபிஎஸ் கனவுகள் பலிக்காது.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மோசமான அரசியல் கனவுகள் இனி பலிக்காது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஜூன் 23 நிலை நீடிக்கும்
அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் இனி பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தனிக்கூட்டம் கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
அதேபோல் 5ல் இரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்தால் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் புதிதாக கூட்டப்படும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகழேந்தி பேச்சு
இதனிடையே சென்னையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அவரது ஆதரவாளர் புகழேந்தி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புகழேந்தி கூறுகையில், எடப்பாடி பழனிசாமியால் இந்தக் கட்சி நடத்த முடியாது என்பது இந்தத் தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. ஆகவே, தர்மம் வென்றிருக்கிறது. அதர்மம் அழிந்திருக்கிறது.

இபிஎஸ் கனவு பலிக்காது
எடப்பாடி பழனிசாமியின் மோசமான அரசியல் கனவுகள் இனி பலிக்காது. அவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் செல்வார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications