எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. மோடிக்கு அடுத்த உயர்ரக பாதுகாப்பு இதுதான்! பின்னணி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு அடுத்த உயர்ரக பாதுகாப்பு இசட் பிளஸ் தான். திடீரென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது.

இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 7 ம் தேதி முதல் அவர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கான பாதுகாப்பு திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இசட் பிளஸ் என்பது நம் நாட்டின் 2வது உயர்ரக பாதுகாப்பாகும். பிரதமர் மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மோடிக்கு அடுத்தப்படியாக உள்ள உயர்ரக பாதுகாப்பு தான் இசட் பிளஸ் பாதுகாப்பாகும்.
இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் மொத்தம் 55 பேர் வரை ஈடுபடுவார்கள். இதில் 10 பேர் என்எஸ்ஜி பிரிவை சேர்ந்த கமாண்டோக்களாகவும், மற்றவர்கள் போலீசாகவும் இருப்பவர்கள். இவர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள்.
இந்த பாதுகாப்பின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தற்போது சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொலை மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. அவரது வீட்டின் தொலைபேசியை தொடர்பு கொண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபு புறம் தற்போது அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நம் நாட்டை எடுத்து கொண்டால் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications