ஓபிஎஸ் விவகாரம்- அதை எப்படிங்க வெளியே சொல்ல முடியும்? பம்மும் செங்கோட்டையன்
முதல்வர் வேட்பாளர் யார் என்று செயற்குழு கூட்டத்தில் பேசியதை வெளியில் வெளிப்படையாக பேசுவது நாகரீகம் அல்ல என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நல்லாட்சியில் நல்ல மழை பெய்கிறது. பிரதமரே பாராட்டும் வகையில் பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றி செயற்குழு கூட்டத்தில் பேசியதை எல்லாம் வெளிப்படையாக பேசுவது நாகாரீகம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி வந்த போது ஓ.பன்னீர் செல்வம் நள்ளிரவில் முதல்வராக பதவியேற்றார்.
ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்த சசிகலா தான் முதல்வராக ஆசைப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததை அடுத்து தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தார் சசிகலா. ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சி வரும் 2021 மே மாதத்தில் நடைபெற உள்ளது.
அடுத்த முதல்வர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிதான்... ஓபிஎஸ்-க்கு திண்டுக்கல் சீனிவாசன் நோஸ் கட்
அடுத்த முதல்வர் வேட்பாளர்
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற மல்லுக்கட்டு நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் முதல்வர் வேட்பாளர் பற்றி மாறி மாறி பேசி வருகின்றனர்.
திண்டுக்கல் சீனிவாசன்
அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதல்வர் வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் நல்லாட்சி
இதனிடையே ஈரோட்டில் செய்தயாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி நடத்தி வருவதாக கூறினர். அந்த நல்லாட்சியின் பயனாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு மழை பெய்து வருகிறது என்றும் கூறினார்.
நாகரீகம் அல்ல
ஜெயலலிதா வழியில் பழனிச்சாமி செயல்படுகிறார். கொரோனா தடுப்பு பணியில் பிரதமரே பாராட்டியுள்ளதாக கூறினார். முதல்வர் வேட்பாளர் பற்றியும் ஓ.பன்னீர் செல்வம் பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், செயற்குழு கூட்டத்தில் அறைக்குள் பேசியதை பொது வெளியில் பேசுவது நாகரீகம் அல்ல என்று தெரிவித்தார்.