அக்னி நட்சத்திரத்தில் புயல்? 8 மாவட்டங்களில் பேய் மழை + 104 டிகிரி சென்னை வெயில்.. டபுள் வானிலை
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொடப்போகும் அக்னி நட்சத்திரக் காலம் நெருங்கி வரும் வேளையில், வானிலையில் அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களுக்கு மழை பெய்ய உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்த வானிலை மாற்றமானது தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு இடையே ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தகட்டமாக வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் வளிமண்டலச் சூழலின்படி, தெற்கு உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நீடிக்கிறது. இதன் நேரடி விளைவாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, திருப்பூர் மழை
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். இது தவிர, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதி மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் காரணத்தால், ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் கடும் வெயில்
தமிழகத்தின் ஒருபுறம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. சென்னையில் இன்று வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும், அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் கடுமையான அனல் காற்றைச் சந்திக்க நேரிடும். மாநிலத்தில் நிலவும் இந்த முரண்பட்ட வானிலை மாற்றம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் மலை மாவட்டங்களில் கோடை மழை நிம்மதியைத் தந்தாலும், சமவெளிப் பகுதிகளில் வெயிலின் கொடுமை வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று வேலூரில் மட்டும் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தி எடுத்துள்ளது.. தமிழகத்தின் சென்னை மீனம்பாக்கத்தில் இந்த ஆண்டின் முதல் முறையாக 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், திருத்தணி மற்றும் கரூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் அனல் காற்று வீசி வருகிறது..
மே மாதத்தில் அரபிக்கடலில் உருவாகும் இத்தகைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் பொதுவாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகப்படியான மழையைத் தரக்கூடியவை.
அக்னி நட்சத்திரம்
வரவிருக்கும் இந்த புதிய புயல் சின்னம் காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தக் கோடை மழை விவசாயிகளுக்கு ஓரளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், திடீர் பலத்த காற்றினால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ள சூழலில், இந்தத் திடீர் புயல் உருவாக்கம் மற்றும் மழைப்பொழிவு வெப்பத்தைத் தணிக்குமா அல்லது ஈரப்பதத்தை அதிகரித்து உக்கிரமான சூழலை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் இந்த புயல் சின்னத்தின் வலிமையை உறுதிப்படுத்தும்.
பெங்களூரு மழை
இதனிடையே, பெங்களூரு நகரில் நேற்று ஒரே நாளில் 110 மி.மீ மழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.. ஏப்ரல் மாதத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பதிவான இந்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது..












Click it and Unblock the Notifications