லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மூலம்... அதிமுகவை அச்சுறுத்த முயற்சி.. திமுக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்..!
சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் திமுக அரசு அதிமுகவை அச்சுறுத்த முயற்சிப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் புறநகர் அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் இல்லத்திலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சாடியிருக்கிறார்.
ஜெயலலிதா மீதும், அதிமுக மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளையும், தேர்தல் பணிகளையும்,ஆற்றிவரும் செயல்வீரர் இளங்கோவன் என்றும் அவரது செயல்பாடுகளை முடக்கும் நோக்கி காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசால் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இ.பி.எஸ். தெரிவித்திருக்கிறார்.
அதிமுக என்பது மக்கள் பேரியக்கம் என்றும் அதனை அழிக்க முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் அதிமுக உண்மைத் தொண்டர்களின் நல்லாசியோடு முறியடிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்ட சேலம் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனிப்பட்ட முறையில் தனி கண்டன அறிக்கையை இ.பி.எஸ். வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஓ.பி.எஸ். இது தொடர்பாக எந்த கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சேலம் இளங்கோவன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸிடம் இ.பி.எஸ். தரப்பு கேட்டதாகவும் ஆனால் அவர் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை காரணமாக கூறி கூட்டறிக்கை வெளியிடுவதில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த சோதனை இன்று அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஆட்சியில் பவர் சென்டர்களாக வலம் வந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலக்கத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications