திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல்... படிப்படியாக அரசு நிகழ்ச்சிகள்
சென்னை: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரும்பாக்கம் என்ற இடத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது.

நேற்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், இன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்காக கட்டிட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்கள் தமிழகத்தில் இல்லை என்கிற நிலையை நோக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், அண்மையில் புதுக்கோட்டை, கரூர் அரசு மருத்துவக்கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதேபோல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல், நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகே இந்த புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமையவுள்ளதால், மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்போது படிப்படியாக காணொலி வாயிலாக நடைபெறத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications