அண்ணாமலையின் சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன் - பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனை ஒட்டி அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் பாஜக தலைவர்கள் தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அந்த வரிசையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன்." என குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையே எதிர்க்கட்சிபோல் அரசுக்கு எதிராக பேசி வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. பாஜக அதிமுகவை அதிகாரம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது. இதனால் அடிக்கடி இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது அந்த உரசல் அதிகரித்து இருக்கிறது.

பொன்னையன் பேச்சு
அண்மையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "தமிழ் மக்களின் பிரச்சனைக்காக தமிழ்நாடு பாஜக போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடாமல் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜகவின் கூற்றுகளை, உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ்நாடு பாஜக மக்களுக்காக பாடுபடவில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்." என்றார்.

பாஜக எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என விமர்சித்தார். 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜகவே எதிர்க்கட்சியாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனும், பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எடப்பாடி கண்டனம்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "48 ஆண்டுகளாக நான் அதிமுகவில் இருக்கிறேன். சட்டமன்றத்தில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு பேசுகிறோம் என்பது மக்களுக்கு தெரியும். பாஜக சட்டப்பேரவைத் தலைவர் எப்படி பேசுகிறார் என்றும் மக்களுக்கு தெரியும். வி.பி.துரைசாமி எந்த கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தார் என்பதையும் மக்கள் அறிவார்கள். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications