இ.பி.எஸ்.க்கு எதிராக கருப்புக் கொடி... அலர்ட் செய்த உளவுத்துறை... பசும்பொன் பயணத்திட்டம்..?
சென்னை: சசிகலா குறித்து அண்மையில் இ.பி.எஸ். தெரிவித்த கருத்து, சில முக்குலத்தோர் சமுதாய அமைப்புகளை கோபமடையச் செய்துள்ளதால் அவர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என உளவுத்துறை தரப்பில் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முடிந்தவரை பசும்பொன் பயணத்தை தவிர்ப்பது நல்லது என இ.பி.எஸ்.க்கு அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக அவரது பயணத்திட்டத்தில் மாற்றம் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே குடலிறக்க பிரச்சனை காரணமாக இ.பி.எஸ். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவர் குருபூஜை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள அதிமுக தலைவர்களுக்கு காலை 11 மணிக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அதன்படி அந்த நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கூட ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செய்துவிட்டனர்.

கடும் கோபம்
இந்நிலையில் சசிகலா குறித்து அண்மையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த ஒரு கருத்து முக்குலத்தோர் சமுதாய அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முதுகுளத்தூர் பகுதியில் முக்குலத்தோர் இளைஞர்கள் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புறக்கணிப்போம் எடப்பாடியை! என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

கருப்புக்கொடி
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வந்தால், அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டங்கள் நடைபெறக் கூடும் என உளவுத்துறை தரப்பில் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமி நாளை பசும்பொன் செல்வாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனிடையே சசிகலா விவகாரத்தில் ஓ.பி.எஸ். மீதும் முக்குலத்தோர் அமைப்புகள் கோபத்தில் இருந்ததாகவும் அதனை முன் கூட்டியே அறிந்ததால் தான் சசிகலா இணைப்பு விவகாரத்தில் பதமாக பேசி அவர்களை ஆஃப் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பசும்பொன் பயணம்
இதனிடையே கடந்த சில மாதங்களாக குடலிறக்க பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பசும்பொன் பயணத்தை அவர் இந்தாண்டு கைவிடுவார் எனத் தெரிகிறது. முதலமைச்சராக பதவி வகித்த நான்கு ஆண்டுகளும் தேவர் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications