உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள்.. திமுக ஐடி விங் நிர்வாகிகள் நியமனமா? எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐடி விங் நிர்வாகிகளை நியமிக்க முயற்சித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை ஐகோர்ட்டு தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் மாடல் அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதியரசர் தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஆள் சேர்ப்புக்கான விதிகளை தளர்த்துவது, தகுதியானவர்களை புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து தகவல் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் தகவல் (ம) மக்கள் தொடர்பு இயக்குநருக்கு விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி
இந்த நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற நிர்வாகத் ஸ்டாலின் மாடல் திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
அரசாணையில் இருப்பது என்ன?
மருத்துவராக இருக்க மருத்துவப் படிப்பும், வழக்கறிஞராக இருக்க சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது.
திமுக ஐடி விங்
இச்சூழ்நிலையில், திமுக அரசு இந்த அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, சாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு (Quota) விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரிய வருகிறது.
தேர்தல் உள்நோக்கம்
மேலும், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது. பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கைவிட வேண்டும்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், 2022ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications