செங்கோட்டையனிடம் கேளுங்க.. என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார்? டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் ஏன் தவிர்த்தார் என்று அவரிடமே கேளுங்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக போல் அடிமை ஆட்கள் இங்கு இல்லை என்று கூறிய அவர், தாம் யாரையும் எதிர்பார்த்ததே கிடையாது என்றும் பதில் அளித்துள்ளார்.
கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதன்பின் அதிமுக பொதுச் செயலாளர் என்று மட்டுமே கூறி வரும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்று பெயர் சொல்வதை தவிர்த்து வருகிறார். இதனால் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதேபோல் இன்றும் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையனின் செயல்பாடுகள் அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மற்ற நிர்வாகிகளுடன் நட்புடன் பழகி வரும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை மட்டுமே தொடர்ந்து தவிர்த்து வருகிறார். சென்னையில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும். என்னை சந்திக்காதது ஏன் என்று அவரிடமே கேளுங்கள்.
அதிமுக சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுகவை போல் அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் என்றும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவன் கிடையாது.. அதேபோல் திமுக போல் வாரிசு அரசியலோ, குடும்ப கட்சியோ கிடையாது. இது ஒன்றும் சர்வாதிகார கட்சி அல்ல. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம்.
எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான். எங்கள் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட எந்த தடையும் கிடையாது. வேறு கட்சியிலும் இந்த சுதந்திரம் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றியவர்கள் என்று தெரிவித்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications