மகளிர் உரிமை தொகை.. சட்டென எடப்பாடி இதை பற்றி பேசுறாரே.. அதிமுக பொதுக்குழுவில் சொன்ன வார்னிங்
சென்னை: அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்குகின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவிடம் தோற்க கூடாது என்பதற்காக மகளிர் உரிமை தொகை வழங்குகின்றனர். பெண்கள் மீதெல்லாம் திமுகவிற்கு பாசம் இல்லை. அவர்களின் வாக்குகள் வேண்டும். மக்களுக்கு என்ன செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை எண்ணி... எண்ணி... எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததால்தான் இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை.
இலவச லேப்டாப் திட்டமும் இளைஞர்களிடம் செல்வாக்கு இழந்ததால் திமுக சார்பாக மீண்டும் கொண்டு வரப்பட்டது. மற்றபடி இளைஞர்கள் மீது நம்பிக்கை எல்லாம் இல்லை. அமைதி, வளம், வளர்ச்சியே அதிமுகவின் தாரக மந்திரம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவின் பயணம் தொடரும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் மக்களையே வாரிசாக பார்த்தனர். 2026ல் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும், என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
ரூ.1000 மகளிர் உரிமை தொகை: 2 நாட்களில் விரிவாக்கம்
மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 12ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. புதிதாகப் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இறுதி லிஸ்ட் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 15 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் கிட்டத்தட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களைப் கொடுக்கவும் இந்த முகாம்கள் பெண்களுக்கு உதவியுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. விரிவாக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சரிபார்ப்புப் பணியில் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் மற்றும் தகுதி அளவுகோல்கள் ஆகியவை கவனமாக ஆய்வு செய்யப்படும்.
புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், டிசம்பர் 13 முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களைச் சென்றடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது காலக்கெடுவை இழந்த அதிகமான பெண்களைச் சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் வருவாய் குறைவான பின்னணி கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகையும் கூடுதலாக வரும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றிப் பேசிய உதயநிதி, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.15 கோடி பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மத்திய அரசின் நிதி மற்றும் நிர்வாகத் தடைகள் இருந்தபோதிலும், தமிழ்நாடு பெண்களின் நலன் மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது என்றார். மாநிலம் தழுவிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications