நவாஸ் கனி- ராஜகண்ணப்பன் மோதல்! ஆட்சியரையே தள்ளிவிடுவதா? வன்முறையை அரங்கேற்றிய திமுக! எடப்பாடி ட்வீட்
சென்னை: மாவட்ட ஆட்சியரையே உதாசீனப்படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு திமுகவின் வன்முறை அரங்கேறி வருகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2.50க்கே தொடங்கிவிட்டதால் நவாஸ் கனிக்கு கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து நவாஸ் கனி இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்போது நவாஸ் கனிக்கும் ராஜகண்ணப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சமாதானம் செய்ய சென்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரனை நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கீழே தள்ளிவிட்டார்.
இதையடுத்து விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது,
மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது ஏன் இன்னும்நடவடிக்கை இல்லை , இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடைப் பெற்றிருக்குமா?. எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications