முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இருவரும் உடனே பதவி விலக வேண்டும்.. எகிறி அடிக்கும் எடப்பாடி!
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளித்த நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் அண்மையில் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னணியில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் தலைமறைவான நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிழாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் 3 ஆண்டுகளாக 3500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன.
அந்த போதைப்பொருள் விற்ற பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும்.
உடனடியாக பதவி விலக வேண்டும்: மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், அவரது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தனது எக்ஸ் சமூக வலைதள முகப்புப் பெயரையும் படத்தையும் மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. "மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில்,
இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் "X" தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!" எனத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications