திமுக அரசை பகைத்து கொள்ளாமல் நடந்துகொள்ளும் எடப்பாடி.. எதிர்க்கட்சி தலைவராக நடக்கவில்லை- மணி லிஸ்ட்
சென்னை: 2021ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படும் எடப்பாடி பழனிசாமி, மாநிலமே திரும்பி பார்க்கும் அளவிற்கு எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்று "ஒன்இந்தியா தமிழுக்கு" பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டம், சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை உள்ளிட்ட சம்பவங்களில் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதிமுக தவறவிட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் பழனிசாமி பாமக மூத்த தலைவர் ஜிகே மணியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதேபோல் எஸ்பி வேலுமணியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதனால் 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமையும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே எதிர்க்கட்சியான பின்னர் அதிமுகவின் செயல்பாடுகளும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளும் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின், எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது மாநில அளவிலான ஏராளமான போராட்டங்களை நடத்தியது. அதிலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக நடத்தப்பட்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது.
பத்திரிகையாளர் மணி பேட்டி
அதேபோல் பாஜகவையும் கடுமையாக எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு கொண்டே இருந்தன. ஆனால் அதிமுக எதிர்க்கட்சியான பின் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று பத்திரிகையாளர் மணி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த நேர்காணலில், உலகம் முழுவதும் இரு வகையில் அரசியல் செய்யப்படுகிறது.
இரு வகையான அரசியல்
ஒரு அதிகாரத்திற்கான அரசியல், மற்றொன்று பணத்திற்கான அரசியல். திமுக தரப்பில் எந்த அமைச்சரை கைது செய்தாலும், எவ்வளவு பணம் கொடுக்கிறேன் என்றாலும், குடும்ப உறுப்பினர்களை ஜெயிலில் போட்டாலும், அடிப்படை கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அதைவிட்டுக்கொடுத்தால் அவர்கள் அதிகாரத்திற்கு வர முடியாது. அவர்கள் அதிகாரத்தை தக்க வைக்க பணம் தேவை என்பதால் ஊழல் செய்வதற்கு அனுமதிக்க கூடும். ஆனால் பணத்தை சம்பாதிப்பது மட்டுமே திமுக நோக்கம் கிடையாது. ஆனால் அதிமுகவின் அரசியல் என்பது, சம்பாதித்த சொத்தை காப்பாற்றுவதற்காக செய்யப்படுகிறது.
அதிமுக நடத்திய போராட்டம்
கடந்த 4 ஆண்டுகளில் பாஜகவை எதிர்த்து அதிமுக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். முதலில் திமுகவை எதிர்த்து அதிமுக என்ன போராட்டத்தை நடத்தியது? அண்ணா பல்கலைக்கழக வழக்கு மற்றும் கள்ளச்சாராய மரணம் ஆகிய விஷயங்களில் செய்த லேசான போராட்டங்களை தவிர்த்து அதிமுக தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் செய்த போராட்டம் என்ன? திமுக அரசை எதிர்த்தால் லஞ்ச ஒழிப்புத் துறை வரும், பாஜக அரசை எதிர்த்தால் அமலாக்கத் துறை வரும். இருவரையும் எதிர்க்காமல் சம்பாதித்த பணத்தை காப்பாற்றலாம் என்ற முடிவில் அதிமுக தலைமையில் உள்ளவர்கள் உள்ளனர்.
ஜகபர் அலி கொலை
சமீப காலத்தில் எவ்வளவோ பெரிய பிரச்சனைகள் தமிழ்நாட்டில் நடக்கிறது. சமூக ஆர்வலரான ஜகபர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அவர் அதிமுககாரர் தான். ரூ.800 கோடிக்கு கனிமவள கொள்ளை என்று ஆதாரங்களுடன் கூறுகிறார். அவரை லாரி ஏற்றி கொலை செய்கிறார்கள். இதன்பின் காவல்துறை முதலில் விபத்து என்றும், பின்னர் கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.
அதிமுகவின் அமைதி
அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கொள்ளையை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் இறப்புக்கு கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. எவ்வளவு பெரிய வழக்கு இது. இதற்கு வெறும் கண்டன அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
சேலம் அரசியல்
அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கிறது. ஆனால் பயன்படுத்த தவறுகிறார்கள். இதனை அதிமுக வேண்டுமென்றே செய்கிறது. அதேபோல் சேலத்தில் அமர்ந்து எப்படி அரசியல் செய்ய முடியும். சேலத்தில் அமர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கும், சென்னையில் அமர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சேலத்தில் அமர்ந்து அவர் கொடுக்கும் பேட்டி தமிழகச் செய்தியாக மாறும். சென்னையிலிருந்து பேட்டி கொடுத்தால் அது தேசிய செய்தியாகும். இந்த அடிப்படை வித்தியாசம் கூட புரியாமல் எடப்பாடி இத்தனை நாட்களாக சேலத்தில் இருந்து பேட்டியளிக்கிறார்.
வாய்ப்பை தவறவிடும் எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்கள், எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது. இதுவரை அவர் சென்னையில் வந்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அரசு ஊழியர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. அரசு ஊழியர்கள் 1.5 லட்சம் பேர் விடுப்பில் இருந்தனர். அதை கூட அதிமுக பெரிதாக்கவில்லை. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென தொகுதி மறுசீரமைப்பு பற்றஇ அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.
அதிமுகவின் அரசியல்
இதன்பிறகாவது, எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு, ஸ்டாலின் அரசு தமிழக அரசு ஊழியர்களின் பிரச்சனையை திசை திருப்பத்தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது என்று சொல்ல வேண்டாமா? ஆனால் அதை பெரிதாகவே எடுக்கவில்லை. இப்படி இருந்தால் அதிமுக எப்படி மக்கள் செல்வாக்கை பெறும். பாஜகவுடன் சென்றாலும் ஜீரோ தான். அவர்களுடன் செல்லவில்லை என்றாலும் ஜீரோ தான். இதற்காகதான் அதிமுக அதிகாரத்திற்காக அல்லாமல் பணத்திற்காக அரசியல் செய்கிறது என்று சொல்கிறேன்.
பாஜகவின் சூழ்ச்சி
அவர்களிடம் கொள்கை புரிதல் என்று எதுவும் கிடையாது. பாஜகவை பொறுத்தவரை தங்களை எதிர்க்க கூடிய கட்சிகளை அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்காக லஞ்சத்தில் ஈடுபட அனுமதிப்பார்கள். அதன்பின் லகானை கொண்டு இழுப்பார்கள். அதுதான் அதிமுகவிற்கு நடக்கிறது. அவர்களால் ஒருநாளும் பாஜகவை எதிர்த்து போக முடியாது. அந்த அளவிற்கு மாட்டியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications