பொதுச்செயலாளரா? வழக்கு நிலுவையில் இருக்கே! கண்டித்த நீதிமன்றம்! திருத்திய மனுவை தாக்கல் செய்த ஈபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருத்திய பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், கடந்த 2022 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையில்தான் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து விளக்கமளித்திருந்த அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் இணைசெயலாளர் இன்பதுரை, “பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ தி மு க பொதுச்செயலாளர் என்பதை உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை உறுதி செய்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்த போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போது அவர், அ தி மு க பொதுச்செயலாளராக தொடர்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்பதால்தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த வழக்கில் எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருக்கும்போது பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்? என்பதுதான்.
நாங்கள் அதற்கான விளக்கத்தை எடுத்து சொன்ன போது, அப்படியானால் இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் இணை ஒருங்கிணைப்பாளர் என இருப்பதை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யும்படி திருத்த மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக திருத்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எடப்பாடி தரப்பில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications