இத கவனிச்சீங்களா? பொதுக்குழுவில் ஓபிஎஸ்சின் “அந்த” பலத்தையே அசைத்த எடப்பாடி - பக்கா பளான்
சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் அவரது சொந்த சமுதாய ஆதரவையும் அசைத்துப் பார்க்கும் வகையில், அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களையே மேடையில் முன்னிலைபடுத்தி இருக்கிறார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

ஓபிஎஸ் நகர்வு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

சமூக அரசியல்
முன்னதாக ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கிளப்பியதிலிருந்தே, தென் மாவட்டம் மற்றும் சமூக ரீதியான ஆதரவை திரட்டத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்டங்களிலும் அவரது சமூகத்திலும் இருக்கும் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருப்பதை காட்ட அவரது ஆதரவாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

எடப்பாடிக்கு அதிகரித்த ஆதரவு
ஆனாலும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஓ.பி.எஸின் சொந்த சமுதாயத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பலரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சென்றுகொண்டிருந்தது. அண்மையில்கூட ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனி அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸின் போடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடியின் மாஸ்டர் ப்ளான்
இந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாய ஆதரவும் தன் வசமே இருப்பதை காட்டவும், முழு ஆதரவையும் ஈர்க்கவும் எடப்பாடி தரப்பு முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாவட்ட தலைவர்களுக்கு முன்னுரிமை
இதேபோல், பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றவர் தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மீதமுள்ள 8 தீர்மானங்களை வாசித்தவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். தீர்மானங்களை முன்மொழிந்தவர் நத்தம் விஸ்வநாதன். கட்சி வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தென் மாவட்டங்களையோ அல்லது ஓபிஎஸ் சமுதாயத்தையோ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications