எடப்பாடி கைக்கு போன ஜெயலலிதாவின் "சூப்பர் பவர்"! பாஜகவிற்கு பெரிய சிக்கல்! இனி எல்லாம் "அவர்" செயல்?
சென்னை: அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. லோக்சபா தேர்தல் குறித்த முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

பொதுவாக அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலத்தில் எல்லாம்.. கட்சி கூட்டங்கள் பெயருக்கு நடக்கும். பெரிதாக ஆலோசனை எதுவும் செய்யப்படாது. ஜெயலலிதா ஒரு முடிவோடு கூட்டத்திற்கு வருவார்.. அந்த முடிவை கூட்டத்தில் சொல்வார்.. அதற்கு நிர்வாகிகள் தலையசைப்பார்கள். ஜெயலலிதா இருந்த வரை கட்சியில் முக்கிய முடிவுகள் இப்படித்தான் எடுக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் எடப்பாடி - ஓபிஎஸ் காலத்தில் இரண்டு பேருமே ஆலோசனை செய்வார்கள், அதன்பின் கட்சியின் டாப் உறுப்பினர்களான வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டை சொல்வார்கள். அதன்பின்தான் எல்லோருக்கும் ஏற்ற முடிவு கட்சியில் எடுக்கப்படும். இப்படித்தான் அதிமுகவில் சமீப நாட்களாக முடிவுகள் எடுக்கப்பட்டு வந்தன.
அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின்பு கூட கட்சியில் பெரும்பாலும் கூட்டாகவே முடிவு எடுக்கப்பட்டது. உதாரணமாக சமீப நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணி மோதல் நிலவி வருகிறது. இதில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என்று ஜெயக்குமார் கூறினார். தான் கூறியதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா காலத்தில் இப்படி பேசி இருக்க முடியாது. அவர் அறிக்கை வெளியிடும் வரை இப்படி நடக்காது. ஆனால் எடப்பாடி இதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
கட்சியின் முக்கிய அறிவிப்புகளை மூத்த உறுப்பினர்கள் வெளியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி சுமுகமாகவே இருக்கிறது. மோடிதான் அடுத்தும் பிரதமர் ஆக வேண்டும் என்று செல்லூர் ராஜு சமீபத்தில் பேசினார். இப்படி இவர்கள் மாறி மாறி பேசுவதால் தொண்டர்கள் குழம்பி உள்ளனர்.
கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இவர்கள் கடுமையான குழப்பத்தை அடைந்து உள்ளனர். இந்த நிலையில்தான் அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இனி கூட்டணி தொடர்பாக எடப்பாடி எடுப்பதே முடிவு.
கிட்டத்தட்ட ஜெயலலிதாவிடம் இருந்த அதே சூப்பர் பவர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு வந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். அதாவது கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி என்ன சொல்கிறாரோ அதுவே இறுதி. மற்ற தலைவர்கள் கருத்துக்களை சொல்லலாம். அதை சொல்ல தடை இல்லை. ஆனால் கடைசியில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதி முடிவு.
அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இன்று பாஜக கூட்டம் குறித்த இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications