எடப்பாடி கொடுத்த ‘அவசர’ அசைன்மென்ட்.. ‘ஒரே நாளில்’.. டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா சி.வி.சண்முகம்?
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு இன்னும் வராத நிலையிலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனது செல்வாக்கை காட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
அதன்பிறகு, காட்சிகள் மாறி பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்த நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஒரு அவசர அசைன்மென்ட்டை கொடுத்து டெஸ்ட் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
யாருக்கும் இடமில்லை.. அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான்.. பொள்ளாச்சி ஜெயராமன் ‛பளீச்’
அதிமுக வழக்கு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே அதிமுகவில் நீடிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நேற்று நடந்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் தலா ஒரு மணி நேரம் வாதங்களை முன்வைத்தனர். ஈபிஎஸ் தரப்பு, இருவரும் இணைந்து செயல்பட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பலத்தைக் காட்டும் எடப்பாடி
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தைக் காட்ட தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். குறிப்பாக, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனிக்கு ஸ்பெஷல் கவனம் கொடுத்து, ஆர்பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெரும் கூட்டத்தைத் திரட்டி, தனது பவரைக் காட்டினார் உதயகுமார்.
சி.வி.சண்முகம் கையில்
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அசைன்மெண்ட்டை முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் கையில் ஒப்படைத்துள்ளார் ஈபிஎஸ். கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளதைக் கண்டித்து திண்டிவனத்தில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நாளை போராட்டம் நடக்கும் என இன்று அறிவித்துள்ளார் ஈபிஎஸ். ஒரே நாளில், ஈபிஎஸ்ஸின் எதிர்பார்ப்பை சிவிஎஸ் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
ஈபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்தால் முடக்கம்
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி.சண்முகம் எம்.பி தலைமையில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல், திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அவசர அசைன்மெண்ட்
நாளை உண்ணாவிரத போராட்டம் என இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது அதிமுக தொண்டர்களையே ஷாக் ஆக்கியுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம். எடப்பாடி பழனிசாமி தனக்கு வைத்திருக்கும் டெஸ்ட்டில் ஸ்கோர் செய்யவேண்டும் என்பதற்காக, தனது ஆதரவாளர்களிடம், பெரும் கூட்டத்தை நாளை கூட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். ஏற்கனவே, ஆர்பி உதயகுமார் தேனியில் பலத்தைக் காட்டியிருப்பதால், அதைவிட தான் சீனியர் எனக் காட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இறங்கியிருக்கிறாராம் சி.வி.சண்முகம்.
டெஸ்ட்
தேர்தல் ஆணையத்தில், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும் எடப்பாடி பழனிசாமி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது சி.வி.சண்முகத்தின் அறிவுரைப்படிதான் என்கிறார்கள். இது தற்போது எதிராகத் திரும்பியதால் ஈபிஎஸ், சிவி.சண்முகத்தை கடிந்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சி.வி.சண்முகத்திற்கு சோதனை வைக்கும் வகையில், திடீர் போராட்டத்தை அறிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.