அடுத்தடுத்த அதிரடி! சாட்டையை சுழற்றிய எடப்பாடி! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு! ஓபிஎஸ்ஸுக்கு மெகா செக்
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி மனு தாக்கல் செய்கிறார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி புதிய கோரிக்கை ஒன்றை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அதன்படி இரட்டை இலையை தேர்தல் ஆணையம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். பெரும்பாலும் இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்றே இந்த மனுவை எடப்பாடி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கள் கிழமை மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் எடப்பாடிக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் இந்த பொதுக்குழு வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார்.

சின்னம் சிக்கல்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.

தடுக்க வேண்டும்
இதை தடுக்க ஒரே வழி அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வர வேண்டும். அல்லது பொதுக்குழு முடிவை தேர்தல் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது என்று எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அனுப்பிய கடிதத்தில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதாக மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகம்தான்
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இதில் மாற்றம் இல்லை. சமயத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில், தீர்ப்பு வந்தாலும், பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான். தேர்தல் ஆணையம் இந்த பொதுக்குழு முடிவை ஏற்கும் வரை, ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். என்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும், என்று இன்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்து உள்ளார். பெரும்பாலும் இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவசர வழக்கு
அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதை தடுக்கும் விதமாக எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளார். இன்று எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நேற்றுதான் தேர்தல் கமிட்டியை எடப்பாடி உருவாக்கிய நிலையில், இன்று அவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications