அமமுகவினர் எப்போது வேண்டுமானாலும் தாய் வீட்டுக்கு வரலாம்.. ஆனால்.. ஒற்றை கண்டிஷன் போட்ட எடப்பாடி!
Recommended Video

சென்னை: அமமுகவும் அதிமுகவும் இணைந்தாலும் தினகரனை மட்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ள கூடாது என்பதில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவை தன் வசமாக்கிக் கொள்ள தினகரன் முயற்சித்தார். ஆனால் அவரை ஒதுக்கி வைத்த அதிமுகவினர் தனி அணியாக பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். இதன் பின்னர் அவருக்கு தன்னம்பிக்கை பிறந்த நிலையில் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். கிட்டத்தட்ட இரட்டை இலை ரேஞ்சுக்கு குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தினார்.

இழுக்கும் முயற்சி
இந்நிலையில் தினகரனுடன் வந்ததால் பதவி பறிபோனது என்பதை உணர்ந்த தினகரன் தரப்பினர் வேறு கட்சிக்கு தாவும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் செந்தில் பாலாஜிதான். இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிமுக, மீதமுள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

சம்மதம்
அதன்படி அதிமுகவின் நலன் கருதி பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் அவர்களை வரவேற்கிறோம் என ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தெரிவித்துள்ளனர். இதனால் அமமுக கூடாரமே காலியாகும் நிலை உள்ளது. இந்த கூத்துகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் அரங்கேறும். என்னதான் அமமுக நிர்வாகிகளை தங்களுடன் இணைத்து கொள்ள அதிமுகவினர் சம்மதித்தாலும் தினகரன் வந்தால் அவரை விரட்டியடிப்பது என்ற நிலையில் உள்ளனர்.

முதலுக்கே மோசம்
ஒரு வேளை தினகரனையும் மன்னித்து அதிமுகவில் ஏற்றுக் கொண்டால் வரும் 2021-இல் சிறைக்கு சென்ற சசிகலா வெளியே வந்தால் அவருடன் இணைந்து அதிமுகவை கபளீகரம் செய்யும் பணிகளில் தினகரன் இறங்கிவிட்டால் முதலுக்கே மோசம் என ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் கருதுகின்றனர். மேலும் வெளியில் இருந்து கொண்டே எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு எதிராக காய் நகர்த்திய தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டால் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிய கதைதான் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.

அமமுக இணைந்தாலும்
தினகரனை மீண்டும் சேர்க்கமாட்டோம் என சென்னையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் பொதுக் கூட்டங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தினகரனை அமைச்சர்கள் நன்றாக வசைப்படுமாறு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். எனவே அமமுக இணைந்தாலும் தினகரனுக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications