அதிமுக தோல்விக்கு காரணம் எடப்பாடி தான்.. ‘10 காரணங்கள்’ லிஸ்ட் போட்டு அட்டாக் செய்த கிருஷ்ணமூர்த்தி!
சென்னை : சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இவை தான் காரணம் என ஒரு நீளமான பட்டியலையே வாசித்துள்ளார் ஓ.பி.எஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என்றும் அவர் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என்று ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி நேற்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக தோல்விக்கு உண்மையான காரணங்கள் என சில பாயிண்டுகளை முன்வைத்தார்.

துதிபாடும் விஷமிகள்
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "எடப்பாடி பழனிசாமியும், அவரை துதிபாடும் சில விஷமிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசி வருகின்றனர். ஓபிஎஸ்ஸை விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அதிமுகவின் தோல்விக்கு ஓபிஎஸ்தான் காரணம் எனக் கூறி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக தோல்விக்கு என்ன காரணம் என்று நான் ஒவ்வொரு பாயிண்டாகச் சொல்கிறேன்.

பாயிண்ட்
ஜெயலலிதாவை விட 100 சதவீதம் சிறப்பாக ஆட்சி செய்ததாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தொண்டர்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தான் தான் என்ற அகங்காரத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் யாரும் ரசிக்கவில்லை.

பதவி
மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்தீர்கள். அவர் கட்சிக்கு உழைப்பவர்களை வைத்து கட்சி நடத்தவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இருப்பவர்களை வைத்து கட்சி நடத்த நினைக்கிறார். ஓபிஎஸ், சாதாரண தொண்டரான ஆர்.தர்மருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போன சி.வி.சண்முகத்திற்கு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்தார். இதுதான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

பெயருக்குத்தான் ஒருங்கிணைப்பாளர்
ஓபிஎஸ் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்பதில்லை. பெயருக்குத்தான் அவர் ஒருங்கிணைப்பாளர். எல்லா முடிவையும் நீங்கள் எடுத்துவிட்டு அவரிடம் கையெழுத்து மட்டும் வாங்கினீர்கள். தொண்டர்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும் தான் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். தர்மயுத்தத்தின்போது யாரெல்லாம் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்களோ அவர்களை எல்லாம் கட்டம் கட்டி அவர்களை வளரவே விடக்கூடாது என ஒழித்துக் கட்டினார்.

துரோகத்தால் தோல்வி
அவர்களில் சிலர் திமுகவுக்கே போய்விட்டார்கள். உதாரணத்திற்கு, லட்சுமணின் மாவட்ட செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, சிவி சண்முகத்திற்கு கொடுத்தார்கள். லட்சுமணன் திமுகவில் சேர்ந்து, சிவி சண்முகத்தை தோற்கடித்தார். நீங்கள் செய்த துரோகங்களால் தான் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால், தோல்விக்கு ஓபிஎஸ்ஸை குற்றம்சாட்டுகிறீர்கள்.

தோற்கடிக்க உள்ளடி வேலை
நீங்கள் யாருக்கெல்லாம் சீட் கொடுத்தீர்கள். ஓபிஎஸ் உட்பட தர்மயுத்தத்தில் அவர் பக்கம் இருந்த அத்தனை பேரையும் தோற்கடிக்க தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக பணப் பட்டுவாடா செய்து வேலை பார்த்தீர்கள். தர்மயுத்தத்திற்குப் பிறகு ஓபிஎஸ்ஸை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களே தவிர திமுகவை ஜெயிக்க வேண்டும் என ஈபிஎஸ் துளியளவும் நினைக்கவில்லை.

இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுத்ததால் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். நீங்கள் சேலத்திலும், விழுப்புரத்திலும், கிருஷ்ணகிரியிலும் ஜெயிக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காக இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தீர்கள். அதுவும் தென் மாவட்டங்களில் தோல்விக்கு ஒரு காரணம். இன்று நீங்கள் கொடுத்த 10.5% இட ஒதுக்கீட்டையும் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

பொறுப்பாளர்களையே நியமிக்கவில்லை
தேர்தலின்போது கட்சியில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களையே நியமிக்கவில்லை. தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு சரியாக பணமும் கொடுக்கவில்லை. கட்சி பேச்சாளர்களை ஈபிஎஸ் கண்டுகொள்ளவே இல்லை. ஓபிஎஸ், ஜெயபிரதீப் ஆகியோர் தான் அவர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்கள். அதிமுகவின் முதுகெலும்பான பேச்சாளர்களை நீங்கள் மதிக்கவே இல்லை.

தொண்டர்களை மதிக்கவில்லை
தொண்டர்களையும் ஈபிஎஸ் மதிப்பதே இல்லை. தேர்தல் வரும்போது மட்டும் கழகக் கண்மணிகள் என வக்கனையாகப் பேசுவார்கள். மற்ற நேரங்களில் தொண்டர்கள் என்ன உதவி கேட்டாலும், ஆளுங்கட்சியாக இருந்தபோதே உதவவில்லை. தொண்டர்களே அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இழந்ததும், தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

கோடநாடு மர்மம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை கண்டுபிடித்து கொடுத்திருக்க வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த கோவிலில் நடந்த அந்தச் சம்பவத்தில் குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க வேண்டும். கொடநாடு கொள்ளை வழக்கு குறித்து மட்டும் எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பேச மாட்டார். அதில் ஈபிஎஸ் நடவடிக்கை எடுக்காததால் அவர் மீதே மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதைச் செய்யாததால் நாம் தோற்றுவிட்டோம்.

தோல்விக்கு காரணம்
கொரோனாவின்போது சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளை மாற்றியது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தியது. இதுவும் தோல்விக்கு காரணம். ஓபிஎஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பார். ஆனால், ஓபிஎஸ் மீது குறை சொல்பவர்களுக்கு பதவி கொடுப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆர்.பி.உதயகுமார் வரை அதுதான் நிலைமை. கட்சி நலனுக்காகத்தான் அமைதியாக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications