சத்தமா.. கேக்கல.. “கூட்டணி” பற்றி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட ஆர்டர்! அதிருதே!
சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியினருக்கு ஒரு முக்கியமான உத்தரவைப் போட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பாஜக கூட்டணி விஷயத்தில் எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனத்தை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்டராம்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அதிமுக. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்த நிலையில் அதிமுக 66 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வென்றது. தொடர்ந்து, கூட்டணியில் இருந்து வந்த சூழலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தொடர்ச்சியான சீண்டல் பேச்சுகளால் அதிமுக தலைவர்கள் கொந்தளித்தனர். இதனால், அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவை கழற்றிவிட்ட வேகத்தில் இஸ்லாமிய கட்சிகளை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறார் ஈபிஎஸ். இஸ்லாமிய சிறை வாசிகள் விடுதலை, சிறையில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த அனுமதி ஆகிய விவகாரங்களில் குரல் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக கட்சி 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் 52வது தொடக்க விழா கொண்டாட்டமும் அதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு சில முக்கிய உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த கடந்த கூட்டங்களிலேயே மா.செக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனை மேற்பார்வை செய்யும் பணி எந்த நிலையில் இருக்கிறது? தொகுதி வாரியாக கள நிலவரம் என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, விசாரித்து மேலும் சில அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளாராம்.
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் பணிகளை மேற்பார்வையிடுங்கள். மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் உடனடியாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடமே நேரடியாக புகார் அக்கலாம் என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதோடு, மூத்த நிர்வாகிகளுக்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் அறிவுறுத்தியுள்ளாராம். பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள், மக்களுக்கு இந்த விஷயத்தில் நம் மீது எந்த சந்தேகமும் வரக் கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளாராம்.
பாஜக உடனான கூட்டணி காரணமாக, காலங்காலமாக அதிமுகவுக்கு கிடைத்து வந்த சிறுபான்மையினரின் வாக்குகளும் கடந்த தேர்தல்களில் திசைமாறியதால், இந்த முறை, சிறுபான்மை வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். பாஜகவுடன் சேர்க்கையே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொன்னால் தான் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவை ஒரு நாடகம் என்று விமர்சித்து வருகின்றனர். இன்றைக்கு பாஜகவிடம் இருந்து விலகுவது போல காட்டிக்கொண்டு, பின்னர் தேர்தல் நெருங்கும் சமயத்திலோ அல்லது தேர்தலுக்கு பிறகோ பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளும் என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்த பிரச்சாரத்தை முறியடிக்கவே எடப்பாடியின் இந்த ஆர்டர் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications