தூத்துக்குடி சூடு! நொடிக்கு நொடி போன அப்டேட்.. டிவி பார்த்து அறிந்து கொண்டதாக எடப்பாடி சொன்னது தவறு!
சென்னை: பொதுமக்களை போல துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்று ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். இந்த சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர்.
போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு உலக அளவில் கவனம் பெற்றது.

துப்பாக்கி சூடு
தமிழ்நாடே இந்த துப்பாக்கி சூடு காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஆனால் துப்பாக்கி சூடு நடைபெற்ற அன்றும், மறுநாளும் அதை பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவே இல்லை. 2 நாட்கள் ஆகியும் இதுபற்றி முதல்வர் விளக்கம் தரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேரில் சென்றும் பார்க்கவில்லை. அதோடு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றையும் மூன்றாவது நாள் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். அதில், தற்காப்புக்காகத்தான் போலீசார் சுட்டிருப்பார்கள் என, நினைக்கிறேன்.

வன்முறை
வன்முறை அதிகரித்துவிட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் இதில் ஊடுருவியதுதான் என்றார்.இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர். துப்பாக்கி சூடு நடந்தபோது டிவியில் பார்த்துதான் அதை தெரிந்து கொண்டேன். நான் சென்னையில்தான் இருந்தேன், டிவியில் பார்த்துதான் வன்முறை எப்படி நடந்தது என்பதை அறிந்து கொண்டேன், என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஒரு முதல்வர்.. 13 உயிர்கள் பலியானது பற்றி இப்படி அலட்சியமாக பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது.

அறிக்கை
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சொன்னது பொய் என்று முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 வருடங்களாக இந்த குழு தீவிரமான விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் பல்வேறு அதிகாரிகள், போலீசார் விசாரணை செய்யப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எடப்பாடி பொய்
அதில், பொதுமக்களை போல துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. அப்போதைய தலைமை செயலர் கிரிஜா, டிஜிபி ராஜேந்திரன் , IG Intelligence சத்யமூர்த்தி, ஆகியோர் மூலம் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து எல்லா விதமான விபரங்களையும் எடப்பாடி பழனிசாமி நிமிடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பெற்றார். அதனால் துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு, என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இந்த அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications