எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்.. 10 முறை மனு கொடுத்தும் மாற்றாதது ஏன்? எடப்பாடி கேள்வி
சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நாங்கள் 10 முறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சபாநாயகர் அப்பாவுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. காவிரி நீர் தராத கர்நாடகாவை கண்டித்து தனித்தீர்மானம் கொண்டு வருவதற்காக சட்டசபை கூடியது. இன்றுடன் சட்டசபை முடிவடைகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அது போல் அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து 3 பேரை நீக்க சொல்லியும் அதையும் சபாநாயகர் சொல்லவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அது போல் தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளர் நான்தான் என்பதை அங்கீகாரம் செய்துவிட்டது.
இந்த நிலையில் அதிமுக உறுப்பினரே அல்லாத ஒருவர் எப்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிக்கலாம். சட்டசபை விதிகளின் படி எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் ஒன்றாக உட்கார வேண்டும் என்பதுதான் மரபு. அப்படியிருக்கும் போது ஒருவர் நீக்கப்பட்ட பிறகு என்னால் எதிர்க்கட்சித் துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.பி. உதயகுமார் வேறு இடத்தில் அமர்ந்திருக்கிறார். நான் வேறு இடத்தில் இருக்கிறேன்.
உயர்நீதிமன்றமும் அவருடைய நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த பிறகு சபாநாயகர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. சபாநாயகர் செய்வது நியாயமும் இல்லை என்றார். இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும்தான் விதிகள் பொருந்தும், துணைத் தலைவர் பதவிக்கு விதிகள் ஏதும் இல்லை.
அந்த பதவி அந்த கட்சியினரே பார்த்து நியமனம் செய்யக் கூடிய ஒன்றாகும். யார் மனதும் நோகாதபடி ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அப்பாவு. ஒரு வேளை எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகிய 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 66 லிருந்து 63 ஆக குறையும்.












Click it and Unblock the Notifications