கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் சொன்னதில் தவறு இல்லை.. ஸ்டாலினுக்கு ஏன் கோபம்- விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் கூறியதில் தவறு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
இன்று மாலை வீடியோ வாயிலாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
அதிகமாக பரிசோதனை செய்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும். ஒரு சோதனை மையத்துடன் ஆரம்பித்து இப்போது 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு தேவை
தினமும் சராசரியாக 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யக்கூடிய திறன் தமிழகத்தில் உள்ளது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமாகும்.
மக்கள் பீதி அடைய தேவையில்லை. ஆனால் மிகவும் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வல்லுனர்கள்
இயற்கை பேரிடர் ஒருமுறை வந்து சென்று விடும். அந்த பேரிடர் சென்ற பிறகு நாம் மீட்பு பணிகளை நடத்தலாம். ஆனால் கொரோனா நோய் பாதிப்பு என்பது உலகளாவிய பெரும் தொற்றுநோய் ஆகும். கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி காரணமாக, ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் ஆகும். இது எப்போது முடிவுக்கு வரும், எப்படி பரவும் என்பதை வல்லுநர்கள் கணிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

வெளிப்படையாக கோவிலுக்கு போகும் முதல்வர்
இந்த நிலையில்தான், சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா முகாமை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் எப்போது குறையும் என்று பத்திரிகையாளர் கேட்டார். முதல்வர் கடவுள் பக்தி கொண்டவர். வெளிப்படையாக கோவிலுக்கு செல்ல கூடியவர். எனவே எதார்த்தமாக ஒரு பதில் அளித்தார். கடவுளுக்குத்தான் தெரியும் என்று அவர் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?

தவறு இல்லை
கடவுள் என்ற வார்த்தையை சொன்னதில் எதற்கு நீங்கள் குற்றம் கண்டுபிடிக்கிறீர்கள்? கடவுள் என்ற வார்த்தையை சொன்னதும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது. வல்லுனர்களால் கணிக்க முடியவில்லை. மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. உலக சுகாதார அமைப்பால் கணிக்க முடியவில்லை. எனவேதான் முதல்வர் கடவுளுக்குத்தான் தெரியும் என்று சொன்னார். இதில் எந்த தவறும் கிடையாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்யுங்கள் அதைவிடுத்து சம்பந்தமில்லாமல் குற்றம் சாட்டுவது தேவையற்றது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications