"எம்ஜிஆர், ஜெ".. அன்று நடந்தது என்ன?.. பொதுச் செயலாளர் உருவானது ஏன்?.. கோர்ட்டில் இபிஎஸ் விளக்கம்
சென்னை: அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கமளித்துள்ளது.
Recommended Video
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். ஒருங்கிணைப்பாளராகிய தான் இல்லாமல் பொதுக்குழுவை கூட்டியது செல்லாது என ஓபிஎஸ்ஸும் பொதுக்குழு தீர்மானங்களை கடந்த ஜூன் 23 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டுவிட்டதால் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் செல்லாது என்பது இபிஎஸ் தரப்பு சொல்கிறது.
இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் இன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

ஒருங்கிணைப்பாளர்
மேலும் ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொதுக்குழுவை யார் கூட்டுவார்கள், ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என கூறிவிட்டு தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தியது ஏன் என நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு இன்றைய தினம் எடப்பாடி தரப்பை பதில் தாக்கல் செய்ய சொல்லியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிபதியிடம் கூறுகையில் , ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஜூலை 11 ஆம்தேதி அதிமுக பொதுக் குழுவை கூட்டம் என கேட்டுக் கொண்டதால் 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

2432 உறுப்பினர்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சியை வழிநடத்த எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். அதிமுகவில்தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டனவே தவிர பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை.

2021 இல் காலாவதியான பதவிகள்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் 2021 டிசம்பரில் பதவிகள் காலாவதியாகிவிட்டன என எடப்பாடி தரப்பு பதில் அளித்திருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications