பன்னீர் செல்வம் எப்போதுமே ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை, விட்டு கொடுத்ததுமில்லை: எடப்பாடி
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் எப்போதுமே ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. இன்றைய தினம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவி உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளரால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள். கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற கட்சியின் விதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 4 மாதங்களில் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

துணை பொதுச் செயலாளர்
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக கே பி முனுசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் உள்ளே நுழைய முயற்சித்த போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுத்தனர்.

கதவு உடைப்பு
இதனால் கதவை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் உள்ளே சென்றார். அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசிக் கொண்டதால் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து அங்கு நிகழ்ந்த வன்முறையால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் ஓ.பன்னீர் செல்வம் எப்போதுமே ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை. கட்சிக்கு 48 ஆண்டுகாலமாக நான் விசுவாசமாக இருந்துள்ளேன். ஒற்றைத்தலைமை பிரச்சினை தொடங்கிய போதே நிர்வாகிகள் சமாதானம் பேசினார்கள்.

எட்டப்பர்கள்
ஓ.பன்னீர் செல்வம் கடைசி வரைக்கும் இறங்கி வரவேயில்லை. ஒற்றைத் தலைமைதான் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும். நீங்கள் எதற்குமே எப்போதுமே விட்டுக் கொடுக்கவில்லை. சில எட்டப்பர்கள் உடனிருந்தே அதிமுகவிற்கு துரோகம் செய்கிறார்கள் என விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications