தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராயம் கலாச்சாரம்! நிர்வாக திறமையில்லை! எடப்பாடி பரபரப்பு பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராயம் கலாச்சாரம் தலைதூக்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக அரசுக்கு நிர்வாக திறமையில்லை எனவும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

''மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும் ,மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.''
''மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.''
''கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது.''
''இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும்.''
''இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications