‘ஆபரேஷன் D’ பியூஷ் கோயலிடம் பேசியது என்ன.. மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. பியூஷ் கோயலிடம் பேசியது என்ன என்று எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியல் களம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு வேறு பெரிய கட்சிகள் இல்லை. ஏற்கனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளனர்.
பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தல், கள நிலவரம், செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினோம். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரங்களை கேட்டறிந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து எப்படி செயல்பட வேண்டும். என்பதை ஆலோசித்தோம். தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.
திமுகவை வீழ்த்த வியூகம்
அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கான திட்டங்களில் நாங்கள் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு அதிமுக - பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செயல்படும். அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications