நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது தமிழக அரசுக்கு தெரியாதா? என்றும் கிளாம்பாக்கத்தில் போதுமான பேருந்து சேவையை உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! என்ற தலைப்பில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!
இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை. பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?
சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் கூட்ட நெரிசல் பிரச்சினையை சரி செய்யவே கிளாம்பாக்கத்தில் பஸ் முனையம் அமைக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் கிளாம்பாக்கம் வழியாகத்தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. விசாலமான பேருந்து நிலையம் என்ற போதிலும் இங்கு சரியான நேரத்திற்கு பேருந்துகள் இல்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதி இரவு வழக்கம் போல் கூட்டம், கிளாம்பாக்கத்தில் அலைமோதியது. ஆனால் போதிய பேருந்துகள் அங்கு இல்லை. தென் மாவட்டங்களுக்கு செல்ல அதிக பயணிகள் வந்திருந்தனர். ஆனால் பயணிகள் பேருந்து இல்லாமல் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
மேலும் அவ்வப்போது வந்த பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் கோபமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் பேருந்துகள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் பேருந்துகள் சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் படாதபாடுபட்டனர். இதனால் நள்ளிரவில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications