எடப்பாடியின் மாஸ்டர் ப்ளான்.. குடும்பத்தோடு காலி! “இவர்கள்” யாருமே கட்சியில் இல்ல - பக்கா ஸ்கெட்ச்
சென்னை: அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோரை நீக்கியதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் அதிமுகவிலிருந்து அகற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
இந்த நிலையில் இன்று மேலும் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மருது அழகுராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

எம்.பி.ரவீந்திரநாத்
அதிமுக உட்கட்சிப்பூசல் வெடித்த நேரத்திலும், அது பூதாகரமான சூழலிலும் அதுகுறித்து அதிகம் பேசாமல் இருந்தவர் ரவீந்திரநாத். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதிலும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உள்ள கவர் படத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை அகற்றாமலேயே இருந்து வந்தார். கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரவீந்திரநாத் பேசியது எடப்பாடி தரப்பை அதிருப்தி அடைய செய்ததாகவும் இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஜெயபிரதீப்
ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகன் ஜெயபிரதீப் கடந்த 4 ஆம் தேதி முகநூல் பக்கத்தில், "கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஓ.ராஜா
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார். சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்த இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மாதம் திருச்செந்தூரில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இது கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஓ.ராஜாவை அப்போது ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் நீக்கினர்.












Click it and Unblock the Notifications