நெஞ்சம் பதைபதைக்கிறது.. கடலூர் அரசு மருத்துவமனை வீடியோவை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
சென்னை: கடலூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பறிக்கப்பட்டதால் ஒருவர் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டார் என்று பரவும் வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது என தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நடு வீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா அவர்கள் (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 8ம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஆக்சிஜன் பறிப்பு
நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்களாம். நேற்று (20.5.2021) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு வெளியே முற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தடுக்க முயன்றுள்ளார்
அதை தடுக்க முயன்ற ராஜாவின் மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவரது மனைவி புகார் செய்துள்ளார். மேலும் போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

பதைபதைக்கும் காணொளி
இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி கஸ்தூரி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துவிடுகிறார் என்றும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

கடும் நடவடிக்கை எடுங்கள்
இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications