பிசிறு தட்டும் கூட்டணி கணக்கு! ம.செ கூட்டத்தில் முக்கிய முடிவு? எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!
சென்னை: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதும், ஓபிஎஸ் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததும் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இக்கூட்டம் நடபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கூட்டணி கணக்குகள் என்ன?
அதிமுகவை பொறுத்தவரை இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன அதே எடப்பாடி பழனிசாமிதான், இன்று பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். ஆனால் இந்த கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை வளைத்து போட்டு வெற்றிக்கு அச்சாரம் போடலாம் என்று திட்டமிட்டிருந்தார். இந்த யோசனையில் இருந்தபோதுதான் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டங்களில் ஆங்காங்கே தவெக கொடி பறந்திருந்தது. இது அவருக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.
இருப்பினும் இக்கூட்டணிக்கு சாத்தியமில்லை என்று தவெக அடித்து கூறிவிட்டது. அக்கட்சியின் இணை செயலாளரான நிர்மல் குமார், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார். இது எடப்பாடி பழனிசாமியின் கனவில் மண்ணை வாரி போட்டிருக்கிறது. தனது தலைமையில் எந்த தேர்தலிலும் கட்சி வெற்றிப்பெறவில்லை. ஏற்கெனவே தேமுதிகவுக்கு வாக்குறுதி கொடுத்த 1 ராஜ்யசபா சீட்டை கொடுக்காததால், தேமுதிகவும் கூட்டணியிலிருந்து நழுவியிருக்கிறது.
எனவே எதிர்வரும் தேர்தலில் விஜய்யை கைக்குள் போட்டு எப்படியாவது வெற்றி பெற்று, தனது தலைமையை நிரூபித்து விட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்ததும் பலிக்கவில்லை. இந்த கூட்டணி கணக்குகள் எல்லாம் பிசுரு தட்டவே, எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகியிருக்கிறாராம். இது போதாது என்று எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கியிருப்பது கொங்கு மண்டலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது எடப்பாடியை சோர்வடைய செய்திருக்கிறது.
விஜய் வருகிறாரோ இல்லையோ, திமுகவை எதிர்ப்பதில் கூரிய கவனம் செலுத்தி கட்சியின் வேலையை தீவிரப்படுத்தினால், குறைந்தபட்ச வாக்குகளாவது நமக்கு உறுதியாகும் என்று பல மூத்த நிர்வாகிகள் யோசனை சொல்ல இன்று, மாட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. இதில் கூட்டணி குறித்து பேச்சுகள் எழுந்தன. இது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு, "கூட்டணி குறித்து பொதுவெளியில் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி தானாக நடக்கும். கவலை வேண்டாம்" என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications