சித்தம் போக்கு-சிவம் போக்கு! நான் கொண்டுவந்த திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது -இபிஎஸ்
சென்னை: அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சித்தம் போக்கு -சிவம் போக்கு என்று திமுக அரசு செயல்படுவதாகவும் ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு ரூ.3 கோடியை வீணடித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

நம்ம ஸ்கூல்
எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்த செயல் திறனற்ற விடியா திமுக அரசு, கடந்த 19.12.2022 அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்" என்று நாமகரணம் சூட்டி இந்த விடியா அரசின் முதலமைச்சர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.

கே.ஏ. செங்கோட்டையன்
23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை சுமார் 82 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர். நிதியாக வரப்பெற்றது.

எளிய விழா
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருந்த தொழில் நிறுவனங்களுக்கும், ஆர்வலர்களுக்கும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் ஏற்படுத்தும் விதமாக, நான் 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், இணையவழி நிதி திரட்டும் இணைய தளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கும் விழாவை எளிமையாக துவக்கி வைத்தேன்.

பெற்றோர் ஆசிரியர் கழகம்
இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டது. இவ்வாறு திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாகச் செயல்படும் என்றும், அக்கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள் என்று அரசு செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

மூடுவிழா
தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த விடியா திமுக அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தையும், இத்திட்டத்திற்காக தனியாக துவக்கப்பட்ட இணையதளத்திற்கும் மூடுவிழா நடத்தியது இந்த விடியா அரசு.

நிர்வாகத் திறனற்ற
எனினும் தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், அம்மாவின் அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, "நம்ம ஸ்கூல்" என்ற தங்கிலீஷில் பெயரை வைத்து இத்திட்டத்தை மீண்டும் துவக்கியுள்ளார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர்.

சித்தம் போக்கு-சிவம் போக்கு
எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஒட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நேற்றைய நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன் ? சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு-சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த விடியா அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.












Click it and Unblock the Notifications