ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டார்.. அன்பழகன் பேச்சு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றதை பார்த்து எடப்பாடி பழனிசாமி மிகுந்த மன வேதனை அடைந்ததாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறினார். மேலும் அதிமுக ஒரு இரும்புக் கோட்டை அதில் யாரும் ஓட்டை போட முடியாது... எடப்பாடி சொன்னால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடலில் கூட குதிப்பார்கள் என்று அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:- திமுக 70 ஆண்டுகால கட்சி தானே.. ஸ்டாலினின் வெற்றி வாய்ப்பு பறிபோனதை கூட எடப்பாடி பழனிசாமியால் தாங்க முடியவில்லை.. ஸ்டாலின் எப்பேற்பட்ட நபர்.. அவரே தோல்வி அடையும் அளவுக்கு மக்கள் ஓட்டு போட்டு இருக்கின்றனர். மனதார எடப்பாடி கஷ்டப்பட்டார்..

அரசியலில் இருவரும் வேறு வேறாக இருதுருவங்களாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் எல்லாம் இந்த மாதிரி நிலமைக்கு போக கூடாது.. அவர் வெற்றி பெறனும். இந்த மக்கள் என்ன நினைக்கிறாங்கள் என்றே தெரியவில்லை. என எடப்பாடி மிகுந்த மன வேதனை அடைந்தார்.
அப்படிப்பட்ட தலைமைப் பண்பு உடையவர் தான் எங்களுடைய தலைவர் எடப்பாடி.. எடப்பாடி சொன்னால், அதிமுக எம்.எல்.ஏக்கள் கடலில் கூட குதிப்பார்கள்.. அதிமுக ஒரு இரும்புக் கோட்டை.. அதில் எந்த ஓட்டையும் இல்லை.. என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் ஏன் அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுவையில் இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அன்பழகன், சென்னையில் வெயில் அதிகமாக இருப்பதால் அவர்கள் புதுவையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டசபை தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் அந்த கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறுவதால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக இரு கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகின. இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாகத்தான் ரஜினிகாந்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை 2 கட்சிகளும் மறுப்பு தெரிவிக்காததால், இந்த தகவல் உண்மை என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சூழலில் தான் அன்பழகனும் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.














Click it and Unblock the Notifications