விடியல் கிடைத்தபாடில்லை.. பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அவல நிலை.. எடப்பாடி பழனிசாமி வேதனை
சென்னை: திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. பட்டப் பகலிலேயே கத்தியால் குத்துவது, அரிவாளால் வெட்டுவது என நாள்தோறும் அரங்கேறி வரும் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தஞ்சாவூரில் பயிற்சி ஆசிரியரை பள்ளி வளாகத்திலேயே வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரத்தில் பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
வேலூரில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, கரூரில் மருந்துக்கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும், அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கி சீர்கெட்டு வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.
பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications