கட்சிக்காரர்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால்..? எடப்பாடி பழனிசாமி போட்ட புது கண்டிஷன்!
சென்னை: அதிமுக நிர்வாகிகள் தன்னை சந்திக்க வரும் போது எப்படி வர வேண்டும் என்பது குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதன்படி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்னை நேரில் சந்திக்கும் போது பூங்கொத்து வழங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் தன் மீது கட்சிக்காரர்கள் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக, முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால் போதுமானது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்", நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருவதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
அந்த வகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதனையடுத்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகம் மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பணியாற்றி வரும் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், என்னை நேரில் சந்திக்க வரும் போதும், கழக நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, இனிவரும் வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இருப்பினும், கழகப் பொதுச் செயலாளராகிய என் மீது நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக என்னை சந்திக்கும்போது, தங்களால் முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் எனது இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications