அதிமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்? அதிரடி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுகவில் அமைப்பு ரீதியாக சில அதிரடி மாற்றங்களை அரங்கேற்றும் திட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இந்த விவகாரத்தில் சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கட்சிப்பணியாற்ற முடியும் எனக் கருதுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

234 தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் மொத்தம் 117 மாவட்டச் செயலாளர்களை நியமித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட பணிகளை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த முடிவுக்கு சிட்டிங் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
அதிகாரம் கை விட்டுச் செல்வதை சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் சிலர் ஏற்கமாட்டார்கள் என்பதால் இந்த விவகாரத்தை பொறுமையாக டீல் செய்ய காய் நகர்த்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதேவேளையில் அதிகாரப் பரவல் என்பது கட்சிக்கு புத்துயிரூட்டும் என்பது அதிமுக தலைமையின் கணக்காக உள்ளது.
இதன் படி நடந்தால் 10 தொகுதிகள், 6 தொகுதிகளை கையில் வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் பலரும் வெறும் 2 தொகுதிகளுக்கு தான் மாவட்டச் செயலாளர்களாக வர முடியும். சோதனை முயற்சியாக இதனை நடைமுறைப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
விரைவில் அதிமுக தலைமைக்கழகத்தில் இது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications