வேலுமணியையே சொல்ல வைத்த எடப்பாடி.. “ராஜதந்திரம்”.. அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி வேலுமணியை, கூட்டணி முறிவு பற்றிய தீர்மானத்தை வாசிக்கச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது இதுகுறித்த தீர்மானத்தை அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி வாசித்தார்.

கூட்டணி முறிவு: அதேசமயம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி முறிவு பற்றிய தீர்மானத்தை, அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியை வைத்தே வாசிக்கச் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவைப் பொறுத்தவரை, பாஜக உடன் கூட்டணி வேண்டும் என்று ஒரு தரப்பும், பாஜக கூட்டணியே வேண்டாம் என ஒரு தரப்பும் இயங்கி வந்தது.
அதில், பாஜக உடனான கூட்டணி அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்தது எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தரப்பு தான். ஆனால், அண்மையில் கூட்டணியில் ஏற்பட்ட உரசல்கள், சீட் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவினர் ஒருமித்த முடிவை எட்டியுள்ளனர்.
மா.செக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?: நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, தனது அறைக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அவரது உத்தரவுப்படி, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வது பற்றிய அறிக்கை தயாராகி வந்தது. அதைப் பார்த்துவிட்டு, உடனே கேபி முனுசாமியை அழைத்து, அதை படித்துப் பார்க்கும்படி கூறியுள்ளார். அவர், எல்லாம் சரியாக இருக்கிறது என்றதும், சி.வி.சண்முகத்தை வரவழைத்து படித்துப் பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு, எஸ்பி வேலுமணியை அழைத்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இந்த அறிக்கையை வாசியுங்கள் எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கொங்கு மண்டல அதிமுகவின் அசைக்க முடியாத புள்ளியான எஸ்.பி.வேலுமணி, பாஜக தலைமையுடன் இணக்கத்தை விரும்புபவர். அவரை வைத்தே, இந்த அறிவிப்பை வாசிக்கச் செய்ததுதான் ஹைலைட் என்கிறார்கள் அதிமுகவினர்.
எஸ்பி வேலுமணி வாசித்தார்: எஸ்.பி.வேலுமணி, பாஜக உடனான கூட்டணி முறிவு தொடர்பான அறிக்கையை வாசிக்கும் முன்பாக, தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்று கூறிவிட்டே அறிக்கையை படித்தார். பின்னர், மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் என்றவுடன் சில தலைவர்கள் எழுந்து பேசினர். அவர்களும் இந்த முடிவை ஆதரித்தே பேசினர்.
அப்போது புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசட்டும் என்றார். இதையடுத்து, ஜெயக்குமார் எழுந்து, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுப்பவர்களுடன் எப்படி நாம் கூட்டணி வைக்க முடியும்? எனவே தான் அவர்களுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு 2024 தேர்தலுக்கு மட்டுமல்ல, 2026 தேர்தலுக்கும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
2 கேங்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றிய அறிவிப்புக்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றுள்ளனர். அதன்பிறகே, செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டு விடுங்கள் என கே.பி.முனுசாமி உள்ளிட்டோரிடம் அறிவுறுத்தி விட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே, கேபி முனுசாமி, வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசினாராம். அப்போது, அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
முன்னதாக அதிமுகவில் பாஜகவை ஆதரிக்கும் அணி, பாஜக கூட்டணியை ஏற்காத அணி என 2 கேங் இயங்கி வந்தது. சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்டோர் பாஜகவால் சிறுபான்மையினரின் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போவதாக கூறி வந்தனர். அதேசமயம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பாஜக கூட்டணியை ஆதரித்து வந்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி நெருக்கடிக்கு உள்ளானார். இந்நிலையில், தற்போது அனைத்து தரப்பையும் சம்மதிக்க வைத்து கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எட்டியுள்ளார் ஈபிஎஸ்.












Click it and Unblock the Notifications