அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.. மொத்தம் 3 கோரிக்கை
சென்னை: சென்னையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இவர்கள் அனைவருமே பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சிக்குப் பிறகு, தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார் அமித் ஷா.
இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது வாகனங்களில் அந்த ஹோட்டலுக்கு சென்றனர்.

7 தமிழர் விடுதலை
இந்த சந்திப்பின்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அரசியல் பேச்சு
இது தவிர, தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பற்றியும் இருவரும் விவாதித்தனர். அரசியல் பேச்சும் அப்போது வந்துள்ளது. அதன் பிறகு தமிழகம் திட்டங்கள் சார்பாக மூன்று கோரிக்கை மனுக்களை கடிதம் மூலமாக அமித்ஷாவிடம் அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கோரிக்கை மனு
அந்த கோரிக்கை மனுவில், காவிரி-குண்டாறு கோதாவரி-காவிரி இணைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத முதலீட்டை வழங்க வேண்டும், தர்மபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்க அந்தந்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், சென்னை சென்னையில் மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைக்க மத்திய அரசு உதவி வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தனது கோரிக்கை மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் கூட்டணி
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக அமைத்த கூட்டணி அப்படியே தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி, தனது உரையின்போது, தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications