பாஜக கூட்டணியை விமர்சிக்க கூடாது.. செயற்குழுவில் அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு
சென்னை: பாஜக கூட்டணி குறித்து பொதுவெளியில் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க கூடாது. பாஜக கூட்டணி உருவானது போல் மேலும் சில கட்சிகள் நம் கூட்டணிக்குள் வரும். 234 தொகுதகிளிலும் அதிமுகவே போட்டியிடுவதாக நினைத்து பணியாற்ற வேண்டும் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதன்பிறகு இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. 2021ம் ஆண்டுக்கு பிறகு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாகவும், அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக, பாஜக தனித்தனி கூட்டணி அமைத்து களமிறங்கின. இருப்பினும் இருகட்சிகளும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெற்றன.
இந்நிலையில் தான் கட்சி பாகுபாடுகளை மறந்து, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி உருவான பிறகு இன்று சென்னை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, ‛‛தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை கட்சி நிர்வாகிகள் இப்போதே தொடங்க வேண்டும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜக கூட்டணி குறித்து பொதுவெளியில் எந்த ஒரு விமர்சனத்தையும் நிர்வாகிகள் வைக்க வேண்டாம். பாஜக கூட்டணி எப்படி உருவானதா அதேபோல் மேலும் சில கட்சிகள் நமது கூட்டணிக்குள் வரும். 234 தொகுதகிளிலும் அதிமுகவே போட்டியிட உள்ளதாக நினைத்து தேர்தல் வேலைகளை செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டாலும் கூட அவ்வப்போது இருகட்சிகள் சார்ந்த விஷயத்தில் நிர்வாகிகள் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடரும் பட்சத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிரச்சனை என்பது வரலாம். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னதாக இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 8 தீர்மானங்கள் திமுகவை கண்டித்து இருந்தது. மேலும் முதல் தீர்மானம் என்பது அதிமு - பாஜக கூட்டணியை மையப்படுத்தி இருந்தது. 2026 சட்டசபை பொதுத்தேர்தலில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கழகம் மகத்தான வெற்றியை பெறுவதற்கு அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும்; திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்றெ செய்து ‛மெகா' கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்த வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சார்ந்த பாராட்டும். நன்றியும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் 14வது தீர்மானத்தில், ‛‛பொது எதிரியை வீழ்த்த ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவது கூட்டணி. அந்த வகையில் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு முழு மனதுடன் ஆதரவை அளித்து அங்கீகரிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 15வது தீர்மானம் என்பது அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலேயே செயல்பட்டு, ஆளுமை திறன் மிக்க பொதுச்செயலாளர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை 2026ம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவோம் என சூளூரை ஏற்போம்'' என அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications