விஜய்க்கு சப்போர்ட்! 26 பேரின் கட்சி பதவியை பறித்த எடப்பாடி! எம்எல்ஏ பதவியை பறிக்க கோராதது ஏன்? பின்னணி
சென்னை: சட்டசபையில் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்பட 26 எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ பதவியை பறிக்க இன்னும் தீவிர முயற்சியை எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு 144 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. திமுக வெளிநடப்பு செய்தது. பாமக நடுநிலை வகித்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியில் தனி அணியாக செயல்பட்ட எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்களும் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தவெக அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 பேர் வாக்களித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதையடுத்து, உடனடியாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் என 26 பேரின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதே நேரத்தில் அவர்களின் எம்.எல்.ஏ பதவியை பறிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டவில்லை. கட்சி பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ பதவியை பறிக்க முயற்சிகளில் தீவிரம் காட்டவில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
கொறடா உத்தரவை மீறினால் கட்சி தாவல் தடை சட்டப்படி எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும், அதிமுக விவகாரத்தில் தற்போது எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டால், அந்த இடங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தல் வெற்றி, தோல்வியை பொறுத்து அதிமுகவுக்கு மீண்டும் கிடைக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒருவேளை இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் தவெக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
அப்படி நடந்தால் அந்தக் கட்சி பெரும்பான்மையை எட்டும். அதேநேரத்தில் அதிமுகவிற்கு தற்போது உள்ள 47 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே இது தங்களுக்கே ரிஸ்காக அமையும் என்பதை கணக்கில் கொண்டே எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications