கூட்டணிக்கு வராத 5 கட்சிகள்.. ஒருங்கிணைந்த அதிமுக உருவாகிறதா? எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாகக் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் அவரது அழைப்பினை அத்தனை கட்சிகளும் நிராகரித்து வரும் சூழலில், மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்துள்ள நிலையில், கூட்டணிக்காக பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்.

சுற்றுப்பயணத்தின் முதல் வாரத்திலேயே திமுக கூட்டணியில் இருந்த விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். பின்னர் வெளிப்படையாகவே தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அழைப்பை எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முதற்காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் நிலையில்லாத தன்மை மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அவரது தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குறைந்து வருவதும் மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன் வரவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டியில், அமமுக கூட்டணியில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.
ஆனால் ஓபிஎஸ் கூட்டணியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, காலம் கடந்த செயல் என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலமாக அமமுகவைக் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது முதலே எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதை டிடிவி தினகரன் நிறுத்தி கொண்டார்.
இன்னும் ஒரு படி மேல் என்று அதிமுக தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை, எடப்பாடி பழனிசாமிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று டிடிவி தினகரன் கூறி இருந்தார். இதனால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications